நான் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் இல்லை என்று என்னிடம் இப்படித்தான் கூறினார்கள் என மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.
இந்திய அணிக்கு மூன்றுவித போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பிலிருந்த விராட் கோலி, டி20 போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இருப்பினும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு தொடர்ந்து சந்தேகத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் கேப்டன் விராட் கோலி இனி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இருக்க மாட்டார்; ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், “விராட் கோலி இடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.” என குறிப்பிட்டிருந்தார். தேர்வுக்குழு அதிகாரி கூறுகையில், “விராட் கோலி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அவர் செய்யவில்லை. லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனித்தனி கேப்டன் இருக்கக் கூடாது என்பதால் ஒரே கேப்டனாக நியமிக்க முடிவு செய்து, ரோகித் சர்மாவை நியமித்துள்ளோம்.” என்று குறிப்பிட்டனர்.
விராட் கோலி போன்ற வீரரை பிசிசிஐ நடத்திய விதம் சற்றும் சரி இல்லை. அவரிடம் சரியான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி தனது பேட்டியில், உண்மையில் என்ன நடந்தது? என்பதை முழுமையாக விவரித்துள்ளார். அவர் கூறுகையில்,
“சரியாக டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களை அறிவிக்கும் முன்பாக என்னிடம் ஆலோசனை நடத்தினார்கள். வீரர்கள் பற்றி மட்டுமே ஆலோசனை நடந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு தேர்வுக்குழு தலைமை அதிகாரிகள், நான் இனிமேல் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இல்லை என்று தெரிவித்தார்கள். அதற்கும் நான் சரி என்று ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு வேறு ஒன்றும் நடக்கவில்லை.” என்றார்.
மேலும் பேசிய அவர், “அனைவரும் கூறுவது போல கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து என்னிடம் யாரும் விவாதிக்கவில்லை. இப்படி மாற்றி விட்டோம் என்ற செய்தியை மட்டும் என்னிடம் கூறினார்கள். அனைத்திற்கும் மேலாக தேர்வுக்குழு எடுப்பதே இறுதிமுடிவு. ஆகையால் அது பற்றி வேறு எதுவும் தெரிவிக்காமல் சரி என்று மட்டும் தெரிவித்துவிட்டு வெளியேறினேன்.” என்றார்.
இந்திய அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை கொடுத்து வந்த விராட் கோலியை தேர்வுக்குழு அதிகாரிகள் நடத்திய விதத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.