நேற்று (ஏப்ரல் 03) இரவு 07.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ ஸ்.சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொண்டது.


இதில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்துள்ளது.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக, ருத்துராஜ் கெய்க்வாட் 57, டேவன் கான்வே 47, ஷிவம் துபே 27, அம்பதி ராயுடு 27, தோனி 12 ரன்களை எடுத்துள்ளனர்.


அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தரப்பில், ஆவேஷ் கான் 1 விக்கெட்டையும், மார்க் வுட், ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
லக்னோ அணி தரப்பில், கைல் மேயர்ஸ் 53, நிக்கோலஸ் பூரன் 32, ஆயுஷ் பதோனி 23, கே.எல்.ராகுல் 20, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 21, கிருஷ்ணப்பா கவுதம் 17 ரன்கள் எடுத்துள்ளனர். சென்னை அணி தரப்பில், மொயின் அலி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மிட்சல் சாட்னர் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.


வெற்றிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தோனி, “அதிக ரன்களை எடுத்த போட்டியாக இது அமைந்தது. ஆட்டத் தொடக்கம் மெதுவாக தோன்றியதாக நான் நினைத்தேன்.
ஆனால் அதன் பிறகு போட்டி விறுவிறுப்படைந்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த முதல் போட்டியாக இது அமைந்தது. எங்கள் வீரர்கள் அடுத்தடுத்து, பல விக்கெட்டுகளை எடுத்து என்னை ஆச்சரியப்பட வைத்தனர்.


வேகப்பந்து வீச்சு இன்னும் அதிகரிக்க வேண்டும். வரும் போட்டிகளிலும் இதேபோன்று விக்கெட்டுகளை எடுப்போம் என எதிர்பார்க்கிறேன். எதிர் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களை உற்று நோக்க வேண்டும்.
அதன் பிறகு, சூழ்நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்ய வேண்டும். சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் நோ-பால் மற்றும் வைடு பால் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், புதிய கேப்டனுடன் நீங்கள் விளையாடுவீர்கள் என்று இரண்டாவது முறையாக எச்சரிக்கிறேன்; அதிக ரன்களை குவித்ததற்கு காரணம் மைதானத்தின் மேற்பரப்பு நன்றாக இருந்ததே.” இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய கேப்டன் குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.