ஹார்திக் பாண்டியா அடிக்கடி காயமடைந்து வருவதால், விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவிப்பார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்திய அணிக்கு முன்னணி ஆல்-ரவுண்டராக இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, 2019ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பைக்கு பிறகு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிய போதும் பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார்.
ஐபிஎல் தொடரிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்து வருகிறார். பந்துவீச்சில் ஈடுபடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசியாக, 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இடம் பெற்ற இவர், பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வந்தார். அதிலும் பந்து வீசவில்லை. இந்திய அணிக்கு கடைசியாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஓரிரு ஓவர்கள் பந்து வீசினார்.
அவ்வபோது முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, ஒருசில போட்டிகளில் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரிலும் விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, 2018ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இனி லிமிடெட் ஒவர் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்த இருப்பதாகவும் விரைவில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
“ஹர்திக் பாண்டியா இந்திய தேசியக் அகாடமியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முதுகு பகுதி அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு பூரணகுணம் பெறவில்லை. சிறுசிறு காயங்களும் தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முழுமையாக லிமிடட் ஓவர் போட்டிகளில் அவரால் பந்துவீச முடியவில்லை. இதன் காரணமாகவே, டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெற முடியாமல் தவிக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசும் நிலை ஏற்படக்கூடும். அதற்கு முழுதகுதில் ஹர்திக் பாண்டியா இல்லை.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் முழுமையாக பந்துவீச முடியாத நிலையில் எப்படி அவரால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும். இதன் காரணமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில், விரைவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் அவர் இருப்பதாக மறைமுகமாக தெரிவித்தார். ஆனாலும் முழுமையாக குணமடைந்து விடுவேன் என அவர் நம்புகிறார். நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும். ஆகையால் விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர் பார்க்கலாம்.” என்று தெரிவித்தார்.
தென்னாபிரிக்கா சென்று லிமிடெட் ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியாவின் இடம் சந்தேகமாகவே உள்ளது.