வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்துள்ளார் கேப்டன் விராட்கோலி.
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்பு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் சில மாதங்களாக தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வந்த ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி வலுகட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இருக்கிறார் என்கிற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால், பிசிசிஐ மீது விராட்கோலி அதிருப்தியில் இருக்கிறார் என்றும் தொடர்ந்து பலரும் பேசி வந்தனர். இதற்கு விராட்கோலி பதில் அளித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் அளித்த பேட்டியில் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.
விராட் கோலி தனது பேட்டியில், தனக்கும் ரோகித்சர்மாவிற்கும் இருக்கும் நட்பு, கேப்டன் பதவி குறித்து பிசிசிஐ அதிகாரிகள் தன்னிடம் பேசியது, ஒருநாள் தொடரில் பங்கேற்பேனா? என்பது குறித்து பலவற்றை பேசியுள்ளார். முதல்கட்டமாக தென்னாப்பிரிக்கா செல்லும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“நான் இந்திய அணிக்காக என்னை அர்ப்பணித்து இருக்கிறேன். அணியின் தேவைக்கு ஏற்றவாறு நான் இடம் பெறுவேன். நான் எனது சொந்த காரணங்களுக்காக ஒருநாள் போட்டியில் விளையாட வில்லை என்று வதந்திகள் வந்தன. ஆனால் அது உண்மை அல்ல இந்திய அணிக்காக இப்போதும் இருக்கிறேன். இனியும் இருப்பேன். ஆகையால் ஆதாரபூர்வமற்ற எந்தவித செய்தியையும் நம்ப வேண்டாம்.” என்று மிகவும் வெளிப்படையாக பேட்டியளித்தார்.
தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டிகள் நடக்கும் பொழுது விராட் கோலியின் மகளுக்கு முதல் பிறந்த நாள் வரவிருக்கிறது. ஆகையால் இதனை தவறவிடக்கூடாது என்று விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் விடுப்பு எடுக்க உள்ளார் என வதந்திகள் வந்தன. வதந்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக விராட்கோலி இப்படி தெளிவுபடுத்தி உள்ளார்.