ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தக்கவைக்காமல் போனது மிகப் பெரிய பலனை கொடுத்திருக்கிறது.
அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக வருகிற பிப்ரவரி மாதம் மிகப்பெரிய ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதனடிப்படையில் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் யாஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரையும் தக்க வைத்தது.
பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற இரு சிறந்த வீரர்களை தக்கவைக்காததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து விளக்கமளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக தலைவர் குமார் சங்கக்காரா கூறுகையில், “பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இருவரும் முக்கியமானவர்கள் என்று தெரியும்.
ஆனால் காயம் காரணமாக அடிக்கடி அவர்கள் அணியில் இடம் பெறுவதில்லை. தற்போதும் முழு உடல் தகுதியுடன் இருவரும் இல்லை. ஆகையால் அவர்களை அணியில் எடுக்கவில்லை. அவர்களை எடுத்தபின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றால் மேலும் பின்னடைவை கொடுக்கும். இதன் காரணமாகவே அவர்களை தக்கவைக்கவில்லை.” என்று தெரிவித்திருந்தார்.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு விளையாடிவந்த ஆர்ச்சர், பிக்பாஸ் மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடினார். தற்போது ஆர்ச்சருக்கு மீண்டும் முழங்கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் குளிர்கால கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதாவது பிப்ரவரி மாதம் வரை எவ்வித போட்டிகளிலும் அவர் விளையாடப்போவதில்லை. மேலும் அவரது காயம் குணமடைய இன்னும் அதிக நாட்கள் எடுக்கலாம். இதன் காரணமாக அதிகபட்சம் ஆகஸ்ட் மாதம் வரை அவர் விளையாடமாட்டார் என்றும் தெரிகிறது.
குமார் சங்ககரா முன்னமே கூறியது போல, இவரை அணியில் எடுத்திருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய தலைவலியாக இருந்திருக்கும். அவரை தக்கவைத்திருந்தால் அதிகபட்சம் 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். ஆர்ச்சருக்கு மாற்று வீரரை தேடும் தலைவலியும் இருந்திருக்கும்.
அணியில் எடுக்காததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது தப்பித்துள்ளது. அதேபோல், பென் ஸ்டோக்ஸ் சமீபகாலமாக முழு உடல் தகுதியுடன் விளையாடவில்லை. இதன் காரணமாக அவரது பேட்டிங் செயல்பாடும் இயல்பை விட குறைவாக இருக்கிறது. அவரும் எப்போது வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம் என்பதால் அணியில் எடுக்காமல் விட்டது சரியான முடிவாக பார்க்கப்படுகிறது.