சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகள் தக்கவைக்கப்படும் வீரர்களின் முழு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மீதம் உள்ள அணிகள் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வெளியிடும்.
ஏலத்திற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதாவது 2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் என்கிற அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களது இறுதிப்பட்டியலை வெளியிட்டுவிட்டன. மும்பை, பெங்களூரு போன்ற அணிகள் தற்போதுவரை இரண்டு வீரர்களை உறுதி செய்திருக்கின்றன.
2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன் ஏறக்குறைய ஏப்ரல் முதல் வாரம் துவங்கும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 10 அணிகளுக்கு இடையே நடைபெறும் அடுத்த சீசனுக்கு முன்பாக, டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, முதல் சீசனில் இருந்து 14வது சீசன் வரை அணியில் இருந்த சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்படவில்லை. மூன்று இந்திய வீரர்களான தோனி, ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும், ஒரு வெளிநாட்டு வீரர் இடத்தில் மொயின் அலியும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி அணியை பொறுத்தவரை, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், பிருதிவி ஷா மற்றும் நோர்கியா ஆகியோர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். கொல்கத்தா அணியில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேச ஐயர் மற்றும் ஆன்ட்ரே ரசல் ஆகிய நால்வரும் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மும்பை அணியை பொறுத்தவரை, ரோகித் சர்மா மற்றும் பும்ரா இருவரும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றனர். மீதம் இரண்டு வீரர்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்போது வரை விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றனர்.
புதிதாக இணைந்திருக்கும் லக்னோ அணி நிர்வாகம் கேஎல் ராகுல் மற்றும் ரஷீத் கான் இருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின்றன. கேஎல் ராகுலை வரும் சீசனில் கேப்டனாக்க அனைத்து திட்டங்களையும் தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.