அஸ்வினிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது. அதன் காரணமாகவே விக்கெட்டுகளை எடுக்கிறார் என புகழாரம் சூட்டியிருக்கிறார் ராகுல் டிராவிட்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் அஸ்வின் 413 விக்கெட்டுகள் உடன் 4வது இடத்தில் இருந்தார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகள் உடன் மூன்றாவது இடத்தில் இருந்தார்.
முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், மூன்றாவது இடத்திற்கு முன்னேறலாம் என்கிற பட்சத்தில், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் அரங்கில் 419 விக்கெட்டுகள் உடன், ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி இந்திய பந்துவீச்சார்கள் மத்தியில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார் அஸ்வின். முதல் இரண்டு இடங்களில் அனில் கும்ப்ளே மற்றும் கபில்தேவ் இருக்கின்றனர்.
அஸ்வினின் இத்தகைய பெரும் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் டிராவிட், அஸ்வின் புரிந்த சாதனை பற்றி பெருமையாக பேசியதோடு மட்டுமல்லாமல் ஹர்பஜன்சிங் பற்றியும் தனது அனுபவத்தை பேசியுள்ளார். அவர் கூறுகையில்,
“இது ஒரு மகத்தான சாதனையாகும். ஹர்பஜன் போன்ற வீரருடன் நான் பல ஆண்டுகள் பயணித்து விளையாடி இருக்கிறேன். எத்தகைய அர்ப்பணிப்பை அவர் கொடுத்து வந்திருக்கிறார் என்பதை நான் நன்கு அறிவேன். தற்போது ஹர்பஜன் சிங் சாதனையை அஸ்வின் முறியடித்திருப்பது மகத்தான ஒன்று.
அஸ்வின் போன்ற வீரர் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்வது, மைதானத்திற்கு ஏற்ப பந்தை மாற்றிக் கொள்வது என எப்போதும் ஆட்டத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அஸ்வினின் ஆரம்ப காலத்தில் நான் அவருடன் விளையாடி இருக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் பார்க்கையில் தன் திறமையை மிகவும் அதிகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு போட்டிக்கும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டே இருப்பதாலேயே இத்தகைய மகத்தான சாதனையை அவர் புரிய முடிந்திருக்கிறது.
தனிப்பட்ட சாதனை மட்டுமல்லாது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றக் கூடியவர். முதல் டெஸ்ட் போட்டியிலேயே தொடர்ந்து தனது சிறப்பான பந்துவீச்சால் அழுத்தங்களை கொடுத்து வந்தார். நிச்சயம் இத்தகைய பெரிய சாதனைக்கு அஸ்வின் முழு தகுதியை பெற்றவராவார்.” என புகழாரம் சூட்டினார்.