விராட் கோலி அதனைச் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. ஆனால் எனக்காக செய்தார் என புகழ்ந்து பேசியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
31 வயதான சூரியகுமார் யாதவ், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அந்த தொடர் இவருக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இருப்பினும் சீரான இடைவெளிகளில் தனது சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்காக கொடுத்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளிலும் மும்பை அணிக்கு 3-வது இடத்தில் களம் இறங்கி, முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 50 ஓர் போட்டிகளிலும் அறிமுகமானார். தற்போது டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் இடம் பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இவர், 11 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அப்போட்டியில் இவர் 4-வது வீரராக களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியுடனான போட்டியின்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் விளையாடிய 2 போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது ஆச்சரியமூட்டும் விதமாக விராத் கோலி, சூரியகுமார் யாதவை 3வது வீரராக களமிறங்க வாய்ப்பு அளித்தார். இப்போட்டியில் 19 பந்துகளில் 25 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த சூர்யகுமார் யாதவ், டி20 உலக கோப்பையின் போது நமீபிய அணிக்கு எதிரான போட்டியில் 3வது வீரராக களம் இறக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில்,
நான் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியில், கடந்த 3 ஆண்டுகளாக 3வது வீரராக களமிறங்கி வருகிறேன். பல்வேறு போட்டிகளில் துவக்கம் முதல் ஏழாவது இடம் வரை களமிறங்கி விளையாடியிருக்கிறேன். எந்த இடத்திலும் களம் இறங்குவேன் என்பது எனது எண்ணம் அல்ல; மாறாக அணிக்கு தேவைப்பட்ட இடத்தில் களம் இறங்கவே நான் எண்ணுவேன். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு நான் விளையாடவில்லை.
ஆறுதல் தரும் விதமாக நமீபியா அணியுடனான கடைசி போட்டியில் நன்கு விளையாட வேண்டும் என நினைத்தேன். அப்போது துவக்க வீரர்கள் விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக, விராட் விளையாடுவார். நான் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது என எண்ணிக் கொண்டிருந்தேன். திடீரென என்னை மூன்றாவது இடத்தில் விராட்கோலி களமிறங்க அனுமதித்தார். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடனான தொடரில் எனக்கு 3-வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுத்தார். அவர் இதுபோன்ற செயல்களை எனக்கு செய்ய வேண்டும் என்ற எவ்வித அவசியமும் இல்லை. ஆனால் என்னை நான் நிரூபித்துக் கொள்ள அந்த இடம் சரியாக இருக்கும் என அவர் நினைத்து, களமிறங்க உதவினார். அந்த தருணத்தில் தான் விராட் கோலியின் தலைமை பொறுப்பு குறித்து நான் நன்கு உணர்ந்து கொண்டேன். என்று மனம்திறந்து பேசினார்.