முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியுற்ற அதற்கான காரணம் இதுதான் என குறிப்பிட்டு பேசியுள்ளார் கேப்டன் டீம் சவுதி.
முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய பிறகு பேட்டியளித்த கேப்டன் டீம் சவுதி கூறுகையில், “வெற்றிபெற்ற அணியாக இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இன்றைய போட்டியில் வீரர்கள் ஆடிய விதம் திருப்தியளிக்கிறது.
முதல் ஓவரில் விக்கெட் விழுந்த பிறகு, சாப்மென் ஆடிய விதம் சிறந்த பங்களிப்பாக பார்க்கிறேன். பந்துவீச்சில் மிட்சேல் சன்ட்னர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இன்றைய போட்டியை தோல்வியை பெற்றிருந்தாலும், கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று அழுத்தம் கொடுத்தது நேர்மறையான சிந்தனையை கொடுக்கிறது.
என்னை பொருத்தவரை, இன்றைய போட்டியில் இந்திய வீரர்களை விட நாங்கள் நன்றாகவே செயல்பட்டதாக உணருகிறேன். 10 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்தது தோல்விக்கு காரணமாக தெரிகிறது. டாரில் மிட்சேல் பந்துவீச்சில் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டார். எங்களுக்கு ரன்கள் போதுமானதாக இல்லை. நிச்சயம் அடுத்து வரும் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.” என்றார்.
முதல் டி20 போட்டியில்..
முதல் டி20 போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு கப்டில் மற்றும் மிச்செல் இருவரும் துவக்கம் கண்டனர்.
மிச்செல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கப்டில் மற்றும் சாப்மென் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் அடித்தனர். கப்டில் 70 ரன்களும் மற்றும் சாப்மென் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை நியூசிலாந்து அடித்திருந்தது. அஸ்வின் மற்றும் புவி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர். இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, ராகுல் 15 ரன்களுக்கு வெளியேறினார்.
ரோகித் 48 ரன்களுக்கும், சூர்யாகுமார் யாதவ் அரைசதம் கடந்த பிறகு, 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, பவுண்டரி அடித்த அடுத்த பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த பண்ட் 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.4 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
62 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.