அவங்க தான் அப்டின்னு நெனச்சேன்… ஆனா இவரு ஆட்டத்தையே மாத்திட்டாரு!!! கேன் வில்லியம்சன் ஓபன் டாக்!!

எங்களது வெற்றிக்கான முழு காரணமும் இதுதான் என போட்டி முடிந்தபிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார் கேன் வில்லியம்சன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் மற்றும் பைர்ஸ்டாவ் இருவரும் ஆட்டத்தை துவங்கினர். பட்லர் 29(24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றும் பைர்ஸ்டாவ் 13(17) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து தடுமாறியது. மொயின் அலி மற்றும் மாலன் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொண்டு அணிக்கு ரன்கள் குவிக்க உதவினர். மலான்(41) ஆட்டமிழந்த பின்னர், உள்ளே வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி(51) அரைசதம் கடந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 166/4 என இருந்தது.

167 எனும் சற்று கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்தில்(4), கேப்டன் வில்லியம்சன் (5) வோக்ஸ் பந்தில் வெளியேறினர். நியூசிலாந்து அணி சற்று கலக்கம் கண்டது. இருப்பினும் கான்வே மற்றும் மிட்செல் ஜோடி விக்கெட் விடாமல் ஆடினர். 

11வது ஓவரில் இருந்து இந்த ஜோடி மெதுவாக தங்களது அதிரடியை ஆடுவதற்கு துவங்கினர். கான்வே 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் மிச்சேல் நங்கூரம் போல ஆடிவந்தார். அடுத்து வந்த ஃபிலிப்ஸ் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, இங்கிலாந்து அனி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கடைசி நான்கு ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்றபோது 17-ஆவது ஓவரை ஜோர்டான் வீசினார். அதில் ஜிம்மி நீசம் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் விளாச நியூசிலாந்து அணிக்கு ரன்ரேட் அழுத்தம் குறைந்தது.

அடுத்து 18வது ஓவர் வீசவந்த அடில் ரஷித் ஓவரிலும் 2 சிக்ஸர்கள் உட்பட 14 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது, 19வது ஓவரில் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை மிச்செல் விளாசினார். இதன்மூலம் 19வது ஓவரிலேயே நியூசிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றியையும் பெற்றது. 19 ஓவர்களில் நியூசிலாந்து அணி 167 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.

போட்டி முடிவுற்ற பிறகு பரிசளிப்பு நிகழ்வில் பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், 

“இரு அணிகளிலும் பல வீரர்கள் ஒன்றாக வெவ்வேறு தொடர்களில் விளையாடியுள்ளார்கள். ஆகையால் இந்த போட்டி நிச்சயம் சிறப்பான ஒன்றாக அமையும் என நினைத்தேன். இங்கிலாந்து அணி சிறப்பாக போராடி வந்தனர். ஆனால் நடுவில் கிடைத்த சில பார்ட்னர்ஷிப், ஒருசில தருணங்கள் எங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது வெற்றியை பெற்று தந்திருக்கிறது.

துவக்கம் முதல் இறுதிவரை மிச்சேல் ஆடிய விதம் மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக இப்படியொரு அழுத்தமான சூழ்நிலையில் விளையாடி வெற்றி பெற்றுத் தந்திருப்பது சிறப்பான ஒன்று. துவக்கம் முதல் நீசம் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் எங்களை வெற்றிக்கு அருகே எடுத்துச் சென்றது.

அவர் அப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தை தான் இயல்பாக விளையாடுவார். அவரிடம் இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இத்துடன் இன்னும் முடிவடையவில்லை எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. அதற்காக முழு கவனத்துடனும் நல்ல மனநிலையுடன் இருப்பதற்கு முயல்வோம். 

நாங்கள் விளையாடிய பொழுது 15 ஓவர்கள் வரை பந்து சரியாக பேட்டிற்கு வராததால் இங்கிலாந்து அணி மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து வந்தனர். ஆகையால் ஆட்டம் அவர்களிடம் சென்று விட்டதோ? என ஒரு கணத்தில் நான் நினைத்திருந்தேன். 17-வது ஓவரில் நீசம் ஆடிய விதமே எங்களுக்கு வெற்றி பாதையை வகுத்து தந்தது. அந்த தருணத்தை தான் நான் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்.” என்றார்.