இரண்டாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிப்பாரா?? என்பதற்கு பதில் அளித்துள்ளார் ரஹானே.
கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கடைசி கட்டத்தில் ஒரு விக்கெட் எடுக்க முடியாமல் திணறியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இப்போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் சதம் விளாசி, 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் கடந்து 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் இவர் ஆவார். இதற்கு முன்னர் அறிமுகப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அரைச்சதம் மட்டுமே அடிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் விராட் கோலி அணியில் இல்லாததால், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அழைத்துவரப்பட்டார். 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். ஆகையால் ஸ்ரேயாஸ் அய்யர் இத்தகைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், மீண்டும் அணியில் இடம் பிடிப்பாரா? என கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
போட்டி முடிந்த பிறகு, டிரா பற்றி முதலில் பேட்டியளித்த ரகானே கூறுகையில்,
“முடிந்தவரை முயற்சித்தோம். நியூசிலாந்து வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். சிறந்த கிரிக்கெட் போட்டியாக இது அமைந்திருக்கிறது. 5வது நாளின் முதல் செஷனில் விக்கெட் விழாமல் கடினமாக இருந்தது. அடுத்த செஷனில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பங்களிப்பை கொடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளித்தனர். இறுதியில் ஒரு விக்கெட் எடுக்காமல் ஆட்டம் கைமீறிச் சென்றது வருத்தமளிக்கிறது.
நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் விக்கெட்டுகள் விழ வேண்டும் என்பதற்காக போட்டியை டிக்ளேர் செய்தோம். அப்போது 5 அல்லது 6 ஓவர்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் வெளிச்சமின்மை காரணமாக பின்னடைவாக அமைந்தது. இன்றைய நாள் துவக்கத்தில் விக்கெட் விழாமல்போனது பின்னடைவாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இருந்தபோதும், நடுவரிடம் தொடர்ந்து வினவி வந்தேன். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. ஆகையால் அதனை சரி என்று ஒப்புக்கொண்டேன்.” என்றார்.
அப்போது குறுக்கிட்ட வர்ணனையாளர், முதல் போட்டியில் இத்தகைய சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் அய்யர் வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டாவது போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? இவருக்கு பதிலாகவா? அல்லது வேறொரு வீரருக்கு பதிலாக விராட் கோலி உள்ளே விளையாடுவாரா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரகானே கூறுகையில்,
“முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஸ்ரேயாஸ் அய்யர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலம் காத்திருந்து அணியில் இணைந்திருக்கிறார். அடுத்த போட்டியில் விராட் கோலி இணைவது அனைவருக்கும் தெரியும். மும்பை மைதானம் சென்றபிறகு, யாரை வெளியில் அமர்த்துவது?
மீண்டும் யாரை உள்ளே எடுத்து வருவது? என்பதற்கு விடை கிடைக்கும். போட்டிக்கு முன்னர் இவர் இருப்பார்? இவர் இருக்க மாட்டார்? என கணிப்பது சரியாக இருக்காது. ஏனெனில், கேப்டனாக இருந்தாலும், தனது இடம் இருக்குமா? என்று சில மணிநேரம் முன்பு யாராலும் கூற இயலாது. போட்டியின் தேவைக்கு ஏற்ப வீரர்கள் இடம்பெறுவர். ஆகையால் ஸ்ரேயாஸ் குறித்து தற்போது கூறுவது சரியாக இருக்காது.” என்று தெரிவித்தார்.