மீண்டும் கமெண்ட்ரி செய்ய வருகிறார் ரவி சாஸ்திரி. இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவிசாஸ்திரி, விராட் கோலியுடன் இணைந்து பல தொடர்களை வெற்றி பெற்று தந்துள்ளார். அவர் வந்த பிறகு அணியில் இளம் வீரர்கள் பலர் உள்ள எடுத்து வரப்பட்டனர். மிகவும் துடிப்பான அணியாகவும், எதற்கும் அச்சம் இல்லாத அணியாகவும் இந்திய அணி வளர்ந்ததற்கு விராட் கோஹ்லி ரவி சாஸ்திரி ஜோடி முக்கிய காரணமாக இருந்தது.
இவரது தலைமைப் பொறுப்பில் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. குறிப்பாக ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு வந்த பிறகு வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் முன்னேறி இருப்பதை காணலாம். ஏனெனில் இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சற்று பின்னடைவாக இருந்தது.
இதில் முழு கவனம் செலுத்தி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் ரவிசாஸ்திரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதன் காரணமாகவே வெளிநாடுகளில் இந்திய அணி அதிக அளவிலான போட்டிகளை வெற்றி பெற முடிந்தது.
நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Something’s cooking… 🧐
Guess what @RaviShastriOfc is up to 👇, and stay tuned to find out! pic.twitter.com/W7cZOHGMhn
— Star Sports (@StarSportsIndia) December 20, 2021
ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக தொலைக்காட்சிகளில் கமெண்டரி செய்துவந்தார். இவரது கமெண்டரிக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்திருப்பார். அப்போது இவர் பேசிய கமென்ட்ரி உலகப்பிரசித்தி பெற்றது.
தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு மீண்டும் கமெண்டரி செய்ய ரவிசாஸ்திரி முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.