பஞ்சாப் அணியில் இருந்து விலகி புதிய அணிக்கு கேப்டனாக திட்டமிட்டுள்ளதாக கேஎல் ராகுல் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் வருகிற டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். தற்போதுவரை, மும்பை அணி ரோஹித் சர்மா மற்றும் பும்ரா இருவரையும் தக்க வைப்பதாக உறுதி செய்துள்ளது.
அதேபோல் சென்னை அணி தற்போது வரை தோனியை மட்டும் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
தக்க வைக்கப்படும் 4 வீரர்களில் இரண்டு இந்தியர்கள் மற்றும் இரண்டு விளையாட்டு வீரர்கள் அல்லது மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்கிற வீதத்தில் தக்கவைத்துக் கொள்ளலாம்.
தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கான இறுதிப்பட்டியல் வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்கு விளையாடி வரும் கேஎல் ராகுல், கடந்த இரண்டு சீசனில் கேப்டன் பொறுப்பிலும் இருந்து வந்தார்.
இந்நிலையில் வருகிற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடப் போவதில்லை என்றும், ஏலத்தில் பங்கேற்று புதிய அணியில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேஎல் ராகுலை ஏலத்தில் எடுக்க லக்னோ அணி நிர்வாகம் தீவிரமாக திட்டம் தீட்டி வருவதும் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 20 கோடி வரை கொடுத்து இவரை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ராகுல் மூன்றாவது டி20 போட்டியின் போது வெளியில் அமர்த்தப்பட்டார். டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றிருந்த அவர், திடீரென காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருக்கிறார். சிகிச்சைக்காக இந்திய தேசிய அகடமியில் சில காலம் தங்க உள்ளார். அதேபோல் அங்கேயே பயிற்சியை மேற்கொண்டு, தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியிலும் அவர் இடம் பெறுவார் என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் புதிதாக லக்னோ, அகமதாபாத் இரு அணிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை இரண்டும் உட்பட மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.