கேஎல் ராகுல் காசுக்காக இப்படி நடந்துகிட்டாரு.. இது நியாயமே இல்லை; பஞ்சாப் அணி உரிமையாளர் காட்டம்!!

கேஎல் ராகுல் நடந்துகொண்டது நியாயமற்ற முறை என்று கடுமையாக சாடியிருக்கிறார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா.

ஐபிஎல் தொடரில் 15வது சீசனுக்கு முன்பாக வீரர்களை தக்க வைக்கும் படலம் நவம்பர் 30-ஆம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். பஞ்சாப் கிங்ஸ் அணி இம்முறை மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷிதீப் சிங் என இருவரை மட்டுமே தக்கவைத்துள்ளது. 

பஞ்சாப் அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் ராகுலை அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்கிற செய்திகள் வெளிவருகின்றன. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று வேறொரு அணியில் விளையாட அவர் முடிவு செய்திருப்பதாகவும் முன்னமே தகவல்கள் வெளியாகின. இதற்கான உண்மை காரணம் அதுவல்ல என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருக்கிறார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா. அவர் கூறுகையில், 

“நாங்கள் கேஎல் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் தக்க வைப்பதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்துவிட்டார். அவரது முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் லக்னோ அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது உண்மை எனில், முற்றிலும் நியாயமற்ற செயலாகும். அதேபோல் விதிமுறையை மீறிய செயலாகும். இதனைக் கண்டறிந்து பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என காட்டமாக சாடினார்.

“மயங்க் அகர்வால் எங்களுக்கு தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். அணிக்கு மிகவும் உண்மையாகவும் நடந்து கொள்கிறார். அவரை வெளிவிடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. அதே போல் அர்ஷிதீப் மிகவும் இளம் வீரராக இருக்கிறார். பஞ்சாப் அணியின் எதிர்காலமாக அவரை பார்க்கிறோம். பந்துவீச்சில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். விரைவில் இந்திய அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.”என்றார்.

இரண்டு வீரர்களை தக்கவைத்தது போக, தற்போது பஞ்சாப் பணியிடம் 72 கோடி மீதமிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் அணிக்கு கடந்த 4 சீசன்களாக விளையாடிய கேஎல் ராகுல் தொடர்ந்து அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்து வந்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 629 ரன்கள் அவர் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.