அனுபவமில்லாத பும்ராவுக்கு ஏன் துணைகேப்டன் பதவி?? – வெளியாகியுள்ள தகவல்!! ஓ.. இதான் விஷயமா?

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. 

டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக ஜனவரி 19ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி துவங்க இருக்கிறது. ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி 31ம் தேதி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய ரோகித் சர்மா, இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதனால், ஒருநாள் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார். 

இந்நிலையில், ஒருநாள் தொடரின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். பும்ராவிற்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் போதிய அனுபவம் பும்ராவிற்கு இல்லை. ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து வந்துள்ள ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் ஒருவருக்கு துணை கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம். ஏன், விராட் கோலிக்கும் துணை கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம். ஆனால் பும்ராவிற்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது ஏன்? என்று கேள்விகள் எழுந்துள்ளன. 

இதுகுறித்து வெளியான தகவலில், பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியில் 2016 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மாவுடன் பயணித்து வருகிறார். இவர் வந்தபிறகு, மூன்றுமுறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சில் பும்ரா இருந்திருக்கிறார். பல இக்கட்டான சூழலில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனைகளை கேட்டிருக்கிறார். ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் அவருக்கு நன்கு தெரியும். எந்த மாதிரியான சூழ்நிலையில், ரோகித் சர்மாவின் முடிவுகள் எப்படி இருக்கும்? மற்றும் அதை எவ்வாறு செயல்படுத்துவது? என பலவற்றையும் பும்ரா அறிந்திருப்பார். 

அதுமட்டுமல்லாது, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இந்திய அணியிலும் பும்ராவிற்கு நல்ல அனுபவம் இருக்கிறது. இளம் வயதிலேயே பொறுப்புகளை கொடுக்கும் பட்சத்தில், இன்னும் சில வருடங்களில் கேப்டன் பொறுப்புகளை ஏற்பதற்கு எந்தவித சிக்கலும் இருக்காது என பல வகையில் யோசித்து இத்தகைய பொறுப்பு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.