ரோஹித் இன்.. கோலி அவுட்! நியூசிலாந்து தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு! புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி??

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 2 தோல்விகள் மூலம் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது; இந்திய கிரிக்கெட் வாரியமும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் போதிய ஓய்வின்மை காரணமாக அழுத்தத்துடன் விளையாடியதாக கூறப்பட்டது. வீரர்களின் செயல்பாடும் அதற்கேற்றார்போல இருந்ததால் தற்பொழுது பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தனது டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார் விராட் கோலி. டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடுவாரா? மாட்டாரா? ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் நீடிப்பாரா? என்கிற கேள்விகளும் வலைதளப்பக்கங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு பிசிசிஐ தரப்பு மௌனம் காத்து வருவதால் கூடுதல் அச்சமும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து தொடருக்கான வீரர்கள் பட்டியல் 

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரூத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐய்யர், யஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்தர் அஸ்வின், அக்ஷர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகம்மது சிராஜ்.

நியூசிலாந்து தொடருக்கான முதல்போட்டி வருகிற நவம்பர் 17ஆம் தேதி ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. இரண்டாவது போட்டி 19ஆம் தேதி ராஞ்சியிலும், மூன்றாவது போட்டி 21ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.