“டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு இவர் தான் கேப்டன்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு ஹர்திக் பாண்டியா புகழாரம்!

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், நேற்று (மார்ச் 31) மாலை 06.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் கேப்டன்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 178 ரன்களை எடுத்துள்ளார். இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 92 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 63 ரன்களை எடுத்துள்ளார்.

குஜராத் அணி உடனான மூன்று போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததால், சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், அதிக ரன்களைக் குவித்த ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “ருதுராஜ் கெய்க்வாட் இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதம் செய்யப் போகிறார். அவருக்கு நேரம் வரும் போது இந்திய அணி அவருக்கு போதுமான ஆதரவை வழங்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பார்.

முதல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு நான் மட்டுமின்றி, மைதானத்தில் இருந்த 1,00,000 கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்” என்றார்.