வேறு வழிதெரியவில்லை ; தோல்விக்கான காரணத்தை ஒப்புக்கொள்கிறேன் ; ரோஹித் ஷர்மா ஓபன் டாக் ;

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், நேற்றைய போட்டி (ஏப்ரல் 02) அன்று இரவு 07.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

அப்போது, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, உள்ளூர் மைதானத்தில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்த நிலையில், வெற்றி பெற்று சாதனைப் படைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை, பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 82 ரன்களையும், கேப்டன் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் எடுத்துள்ளனர். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், திலாக் வர்மா 84 ரன்களையும், நேஹால் வதேரா 21 ரன்களையும் எடுத்துள்ளனர்.

போட்டிக்கு பின் பேட்டியளித்த கேப்டன் ரோஹித் சர்மா, “முதல் ஆறு ஓவர்களில் பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் இல்லை. ஆனால் திலாக் வர்மா பேட்டிங்கை சிறப்பாக செய்தார்.

ஆனால், பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செய்லபடவில்லை. சின்னசாமி மைதானம் பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளமாக இருந்தது. திலாக் வர்மா மிகவும் திறமையானவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரன்களை எடுத்துக் கொடுத்த திலாக் வர்மாவிற்கு வாழ்த்துகள். நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. பும்ரா இல்லாமல் விளையாடுவது ஒரு வித்தியாசமான போட்டியாக உள்ளது. எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானர்வர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.