சென்னை அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத ? ; CSK அணியில் ப்ளேயிங் 11 இதுதான் ;

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பதால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, சுமார் 1426 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, களமிறங்குவதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்றால் மிகையாகாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளார். இது குறித்து பேசிய அவர், “சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடப் போவது உற்சாகம் அளிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் காம்பினேஷன் சிறப்பாக உள்ளது. தொடர் செல்ல செல்ல சென்னை அணியின் செயல்பாடுகள் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேப்பாக்கம் மைதானம் கோட்டையாகும். இந்த மைதானத்தில் இதுவரை 56 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, சுமார் 40 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து சென்னை அணியின் வெற்றி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில் இடம் பெறவுள்ள லெவன் அணிகளின் வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலைப் பார்ப்போம்!

கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டிவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மிட்சல், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் ஆகிய வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, மார்க்ஸ் ஸ்டோனிஸ், ஆவேஷ்கான், ரவி பிஸ்நோய், ஜெய்தேவ் உனட்கட், மார்க் வுட் ஆகிய வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

ஆல்ரவுண்டர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் என மிகச்சிறந்த அனைத்து வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளதாலும், மைதானம் சென்னை அணிக்கு சாதகமானது என்பதாலும், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.