ஐபிஎல் 2023ல் பட்டைய கிளப்ப போகும் முக்கியமான விதிமுறைகள் ; ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது ; முழு விவரம் இதோ

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த தொடக்க நிகழ்ச்சியில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, மார்ச் 31- ஆம் தேதி இரவு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்த வகையில், போட்டியில் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கும் வகையில், ஐ.பி.எல். நிர்வாகம் பல்வேறு மாற்றங்களை நடப்பு ஐ.பி.எல். தொடரில் அமல்படுத்தப்படவுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

‘Impact Player’ என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, டாஸ் போடும் போது, ஒவ்வொரு அணியும் கொடுக்கும் களம் இறங்கும் 11 வீரர்கள் பட்டியலுடன் 4 மாற்று வீரர்களின் பெயரையும், அணிகளின் கேப்டன்கள் அளிக்க வேண்டும். 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக மாற்று வீரரை களம் இறக்கலாம். போட்டியின் நடுவே மாற்று வீரரை களம் இறக்கலாம். இந்த மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் ஈடுபட முடியும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் களம் காணும் 11 வீரர்களில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே வெளிநாட்டு வீரராக இருக்க முடியும். நான்கு வெளிநாட்டு வீரர்களைச் சேர்த்து இருக்கும் பட்சத்தில் அந்த அணி வெளிநாட்டு வீரரை மாற்று வீரராக களமிறக்க முடியாது. இந்திய வீரரை மட்டுமே மாற்று வீரராக களமிறக்க முடியும்.

11 வீரர்கள் கொண்ட அணியில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் 3- க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, மாற்று வீரராக வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். அதேபோல், மாற்று வீரர் களமிறக்கப்பட்டால், அவருக்கு பதிலாக வெளியேறும் வீரர், அந்த போட்டியில் மீண்டும் களமிறங்க முடியாது.

மாற்று வீரர் 4 ஓவருக்கு பந்து வீசலாம். ஒவ்வொரு ஓவர் முடிவிலும், விக்கெட் விழும் போதும், மைதானத்தில் இருக்கும் நடுவர் மாற்று வீரரைக் களமிறக்க சிக்னல் கொடுப்பார். அதைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் மாற்று வீரரைக் களமிறக்கலாம்.

நோ பால் மற்றும் வைடு பால் என நடுவர் வழங்கும் போது, அதில் ஆட்சேபனை இருந்தால், அதனை எதிர்த்து டிஆர்எஸ் முறையின் படி முறையீடு செய்யலாம். இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.