ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ரோஹித் ; இந்திய அணிதான் முக்கியம் என்று முடிவு ;

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 16ஆவது தொடர் நாளை மறுநாள் (மார்ச் 31) மாலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றனர். ஐ.பி.எல். போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னணி வீரர்கள் பலரும் காயங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது அணி நிர்வாகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மாற்று வீரர்களைத் தேர்வுச் செய்யும் பணிகளில் அணி நிர்வாகிகளும், கேப்டன்களும், அணியின் பயிற்சியாளர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். எனினும், கடந்த இரண்டு முறை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல், அந்த அணி வெளியேறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடம்பெற்றுள்ள நட்சத்திர ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அணியில் உள்ள இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருந்த போதிலும், தற்போது ஃபார்மில் இல்லை.

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும், சூர்யகுமார் யாதவ் ரன்னும் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ரோஹித் சர்மா விளையாட உள்ளதாலும், அதற்கு முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதாலும், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

அதேபோல், ரோஹித் சர்மா பங்கேற்காத போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க, அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கேப்டன் ரோஹித் ஷர்மா, 227 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, 40 அரைசதங்கள், ஒரு சதம் என மொத்தம் 5,879 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.