நான் இருக்கான் எல்லாம் பாத்துக்கலாம் ; புதிய கேப்டனை அறிவித்த கொல்கத்தா அணி ; உற்சாகத்தில் கொல்கத்தா ரசிகர்கள் ;

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே அவர் வெளியேறினார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனை பேரில், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்துக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் நிலையில், அவர் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலந்துக் கொள்வாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். இந்நிலையில், நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக 29 வயதாகும் நிதிஷ் ராணாவை நியமித்துள்ளது.

இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் ஐந்து ஐ.பி.எல். சீசனில் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ் ராணா, 1 ஒருநாள் போட்டியிலும், இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு வருகிறார். நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடததால், அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார்.

ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து, நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் விளையாடுவார் என்று நம்புகிறோம். நிதிஷ் ராணா வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் தனது மாநில அணிக்காகவும், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காகவும் நன்கு விளையாடிய அனுபவம் உள்ளது. 2018- ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் நிதிஷ் ராணா.

அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் மற்றும் அணி வீரர்களின் ஆதரவும் அவருக்கு உள்ளது. எனவே, கேப்டன் பதவியில் சிறந்து விளங்க நிதிஷ் ராணாவை வாழ்த்துவதாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வர வாழ்த்துகிறோம்” என்று ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31- ஆம் தேதி மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.