டெஸ்ட், ஒருநாள், ஐ.பி.எல். போட்டிகளில் தோனி எத்தனை ரன்களை குவித்துள்ளார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த தொடக்க நிகழ்ச்சியில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, மார்ச் 31- ஆம் தேதி இரவு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தலைமைத் தாங்கி அணியை வழி நடத்திச் செல்கிறார். உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தோனி திகழ்கிறார்.

தனது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இருந்த போது, சக வீரர்களிடம் எளிமையாகவும், எப்போதும் சிரித்தபடியே ஆலோசனைகளையும் வழங்குவார். இதனால் தோனியை அவரது ரசிகர்கள், சக வீரர்கள் ‘கூல் கேப்டன்’ என்றே அழைக்கின்றனர்.

41 வயதான தோனி ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிறந்தவர். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4,876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10,773 ரன்களையும் குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 1,617 ரன்களையும், 234 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 4,978 ரன்களையும் எடுத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 சதங்களையும், டெஸ்ட் போட்டியில் 6 சதங்கள் மற்றும் ஒரு இரட்டைச் சதத்தையும் தோனி பதிவுச் செய்துள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் அதிரடி காட்டும் தோனி, சச்சின், ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பெற்றவர்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியின் போது தனது ஓய்வை அவர் அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம், கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் போட்டி நடைபெறாத நிலையில், தற்போது நடைபெறவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.