விராட்கோலி, ரோகித் பெரிய ஆளு தான்.. ஆனாலும் இவருக்கு பந்து வீசத்தான் எனக்கு பயமே; பாக்., வீரர் வாஹப் ரியாஸ் ஓபன் டாக்!!

0

இவருக்கு பந்து வீச எனக்கு சற்று பயமாக இருக்கும் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வாகப் ரியாஸ்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுள் முன்னணி வீரராக இருந்து வருபவர் வாஹப் ரியாஸ். தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பு கொடுத்து வரும் இவர், 2008 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என சில லீக் போட்டிகளிலும் இவர் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

பலதரப்பட்ட லீக் போட்டிகளில் விளையாடியுள்ள வாகப் ரியாஸ், சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுவரை விளையாடியதில் யாருக்கு பந்துவீசியது மிகவும் கடினமாகவும், சற்று அச்சமாகவும் இருந்தது என்று பதிலளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,

“நான் பல முன்னணி வீரர்களுக்கு பந்துவீசி உள்ளேன். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி, பாபர் அசாம் போன்ற முன்னணி வீரர்களுக்கு நான் பந்துவீசி இருக்கிறேன். நான் வீசியதில் மிகவும் கடினமாக கருதியது ஏபி டிவில்லியர்ஸ்-க்கு மட்டும்தான். அவருக்கு கடினமான பந்து இதுதான் என்று கூற இயலாது. எந்த மாதிரியான பந்து வீசினாலும் எளிதாக அடிக்கக் கூடியவர்.

மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் அடிக்கக் கூடியவர் என்பதால் அவருக்கு கணித்து பந்து வீசுவது மிகவும் கடினம். முதலில் வீசிய பந்தை வைத்தே அடுத்த பந்து எப்படி வரும் என்று எளிதாக கணித்து, அதை பவுண்டரி சிக்சர்கள் ஆக்கிவிடுவார். இதனால் மிகவும் சிரமப் பட்டு இருக்கிறேன். அச்சமாகவும் உணர்ந்துள்ளேன்.” என்று மனம் திறந்து பேசினார்.

மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் பந்தை எளிதாக அடிக்கக் கூடியவர் என்பதால் ‘மிஸ்டர் 360’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். சமீபத்தில் லீக் போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here