அந்த இடத்தில் தவறவிட்டோம்… எங்களை மொத்தமாக முடித்துவிட்டார்கள்!! தோல்விக்கு இது மட்டுமே காரணம்; இயன் மார்கன்!!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியுற்றதற்கு இதுவே காரணம் என்று போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் மற்றும் பைர்ஸ்டாவ் இருவரும் ஆட்டத்தை துவங்கினர். பட்லர் 29(24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றும் பைர்ஸ்டாவ் 13(17) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து தடுமாறியது. மொயின் அலி மற்றும் மாலன் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொண்டு அணிக்கு ரன்கள் குவிக்க உதவினர். மலான்(41) ஆட்டமிழந்த பின்னர், உள்ளே வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி(51) அரைசதம் கடந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 166/4 என இருந்தது.

167 எனும் சற்று கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்தில்(4), கேப்டன் வில்லியம்சன் (5) வோக்ஸ் பந்தில் வெளியேறினர். நியூசிலாந்து அணி சற்று கலக்கம் கண்டது. இருப்பினும் கான்வே மற்றும் மிட்செல் ஜோடி விக்கெட் விடாமல் ஆடினர். 

11வது ஓவரில் இருந்து இந்த ஜோடி மெதுவாக தங்களது அதிரடியை ஆடுவதற்கு துவங்கினர். கான்வே 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் மிச்சேல் நங்கூரம் போல ஆடிவந்தார். அடுத்து வந்த ஃபிலிப்ஸ் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, இங்கிலாந்து அனி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கடைசி நான்கு ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்றபோது 17-ஆவது ஓவரை ஜோர்டான் வீசினார். அதில் ஜிம்மி நீசம் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் விளாச நியூசிலாந்து அணிக்கு ரன்ரேட் அழுத்தம் குறைந்தது.

அடுத்து 18வது ஓவர் வீசவந்த அடில் ரஷித் ஓவரிலும் 2 சிக்ஸர்கள் உட்பட 14 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது, 19வது ஓவரில் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை மிச்செல் விளாசினார். இதன்மூலம் 19வது ஓவரிலேயே நியூசிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றியையும் பெற்றது. 19 ஓவர்களில் நியூசிலாந்து அணி 167 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.

தோல்விக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்வு பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் கூறுகையில்,

“இரு அணிகளிலும் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இன்றைய போட்டிக்கான மொத்த பெருமையும் வில்லியம்சன் மற்றும் அவரது அணி வீரர்களுக்கு சேரும். எங்களை மொத்தமாக முடித்துவிட்டார்கள். இருப்பினும் எங்களது வீரர்கள் மீது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

தங்களது முழு பங்களிப்பை இந்த தொடர் முழுவதும் அளித்திருக்கின்றனர். இன்றைய போட்டியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 16 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களது பக்கமே இருந்தது. 17வது மற்றும் 18-வது ஓவரில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சற்று அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டோம்.

அந்த புள்ளியில்தான் ஆட்டம் நியூசிலாந்து அணியின் பக்கம் மாறிவிட்டது. நாங்கள் பேட் செய்தபோது சரியாக சிக்சர்கள் அடிக்கவில்லை. அதன் காரணமாக 10 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறோம். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சரியான நேரத்தில் சிக்சர்களை விளாசினர். குறிப்பாக நீசம் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி ஆட்டத்தை தங்களது பக்கம் திருப்பினார். அந்த தருணமே தோல்விக்கு காரணமாக நான் பார்க்கிறேன்.” என சற்று வருத்தத்துடன் பேட்டியளித்திருந்தார்.